செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 18 July 2020 1:53 AM GMT (Updated: 18 July 2020 1:53 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 124 பேர் பாதிக்கப்பட்டனர். ஆதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரப்பாக்கம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த 37 வயது ஆண், செல்வராஜ் நகர் 6-வது தெருவில் வசிக்கும் 33 வயது வாலிபர், காளிதாசன் தெருவைச் சேர்ந்த 40 வயது ஆண், செல்லியம்மன் நகரில் வசிக்கும் 42 வயது பெண், 14 வயது சிறுவன், காரணைப்புதுச்சேரி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த 33 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மண்ணிவாக்கம் குறிஞ்சி மாலை தெருவில் வசிக்கும் 63 வயது முதியவர், குறிஞ்சிப்பூ தெருவை சேர்ந்த 58 வயது பெண், வண்டலூர் ஓட்டேரி மாணிக்க ஜலகண்ட தெருவை சேர்ந்த 30 வயது பெண், ஊனமாஞ்சேரி காந்தி தெருவை சேர்ந்த 51 வயது பெண், 62 வயது முதியவர், கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் 3-வது தெருவில் வசிக்கும் 72 வயது முதியவர், மறைமலைநகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 56 வயது ஆண், ரெயில் நகர் 14-வது தெருவில் வசிக்கும் 40 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 35 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 6,763 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 86, 68, 62 வயது மூதாட்டிகள், 72 வயது முதியவர், 48,48,42 வயது பெண்கள், 58 வயது ஆண் ஆகிய 8 பேர் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வரதராஜ நகர், கட்டபொம்மன் தெரு போன்ற பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கடம்பத்தூர் ஒன்றியத்தில் வயலூர், கூவம், திருபந்தியூர், பிஞ்சிவாக்கம், செஞ்சி பானம்பாக்கம், அகரம், புதுமாவிலங்கை, மணவாளநகர் போன்ற பகுதிகளில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 147 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆத்தனஞ்சேரி சுபஸ்ரீ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய வாலிபர், படப்பை மேட்டுத் தெருவைச் சேர்ந்த 24 வயது வாலிபர் மற்றும் அதே படப்பை பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர்.

இதுவரையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 422 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 348 பேர் மருத்துவமனையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,015 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 59 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story