கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 19 July 2020 12:49 AM GMT (Updated: 19 July 2020 12:49 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை, 

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் அந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு மண்டலங்கள் உருவாக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனிமை முகாம்களில் போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படுவதையும், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தற்போது மாநிலத்தில் 540 கொரோனா நோயாளிகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கண்டறிய மாநிலத்தில் ஆன்டிஜென் பரிசோதனைகளை அதிகரிக்க அரசு முடிவு செய்து உள்ளது.

மாநிலத்தில் மதம், சமூக மற்றும் அரசியல் கூட்டங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு, ரத்த பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதுபற்றி மக்களிடையே அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story