பிரதமர் மோடியுடன் பட்னாவிஸ் சந்திப்பு - கொரோனா நிலவரம் குறித்து தெரிவித்ததாக பேட்டி


பிரதமர் மோடியுடன் பட்னாவிஸ் சந்திப்பு - கொரோனா நிலவரம் குறித்து தெரிவித்ததாக பேட்டி
x
தினத்தந்தி 18 July 2020 10:15 PM GMT (Updated: 19 July 2020 1:10 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து பிரதமரிடம் கூறியதாக அவரை சந்தித்தப்பின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை, 

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்டார். மேலும் மாநில அரசு மேற்கொண்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர், மராட்டியத்தில் ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை' திட்டம் எதுவும் இல்லை என கூறினார். இந்தநிலையில் அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர், மாநிலத்தில் உள்ள கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவராக அரசின் திட்டங்களில் உள்ள குறைகளை எடுத்து கூறி அதில் முன்னேற்றம் ஏற்படுத்துவது எனது வேலையாகும். மும்பையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல அவர் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திரசிங் தோமரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு, “மராட்டியத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு நல்ல திட்டங்களை அறிவிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Next Story