மரங்களை வெட்டிய விவசாயியை கண்டித்து மறியல்


மரங்களை வெட்டிய விவசாயியை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 19 July 2020 1:55 AM GMT (Updated: 19 July 2020 1:55 AM GMT)

மரங்களை வெட்டிய விவசாயியை கண்டித்து மறியல்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையோரத்தில் வேம்பு மற்றும் புங்கை மரங்களை நடவு செய்து பராமரித்து வந்தனர். அந்த இடத்தை ஆக்கிரமித்து விவசாயி ஒருவர், இரவோடு இரவாக கம்பிவேலி போட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு நின்ற மரங்களையும் அவர் வெட்டிக்கொண்டிருந்தார்.

இதனையறிந்த கருக்காம்பட்டி கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த விவசாயியை கண்டித்து கரூர்-வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் கருக்காம்பட்டி பிரிவு அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் மரங்களை வெட்டிய விவசாயி மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story