கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்


கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
x
தினத்தந்தி 19 July 2020 5:51 AM GMT (Updated: 19 July 2020 5:51 AM GMT)

மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:-

36 கட்டுப்பாட்டு பகுதிகள்

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகமான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நோய் தொற்று பரவுவது தடுக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள 36 கட்டுப்பாட்டு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தொற்று பரவாமல் தடுக்க அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள வியாபாரிகள் இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதால், அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். மழை பெய்யும் போது கடைகளுக்குள் தண்ணீர் செல்கிறது. ஆகவே தண்ணீர் தேங்காதவாறு சிறிய வடிகால் அமைத்து தண்ணீரை வடிய வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வு

அதன்பிறகு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமையும் அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டு, அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறையை ஆய்வு செய்தார். பின்னர் நோயாளிகளுக்கு சத்து மாத்திரை, முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், முன்னாள் நகரசபை தலைவர் குமரன், ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், ஆர்.வி.மணி, எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story