திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி


திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 19 July 2020 6:32 AM GMT (Updated: 19 July 2020 6:32 AM GMT)

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர், கோவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விருத்தாசலம்,

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பாதிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அந்த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி.அரசு (செய்யூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜூனன் (கோவை தெற்கு) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகினர்.

இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கணேசன் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் கணேசன்(வயது 55). கழுதூர் கிராமத்தை சேர்ந்த இவர், தற்போது விருத்தாசலம் தில்லைநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியிலும், கடலூர் மேற்கு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தார்.

இந்த நிலையில் கணேசன் எம்.எல்.ஏ.வுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சினை ஏற்பட்டது. கொரோனாவுக்கான அறிகுறி தென்பட்டதால் அவர், கடந்த 16-ந் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு தானாக சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது உமிழ்நீரை எடுத்துக்கொண்ட சுகாதாரத்துறையினர், அதனை பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் கணேசன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், விருத்தாசலம் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று, கொரோனா தொற்று உறுதியானது குறித்து கணேசன் எம்.எல்.ஏ.விடம் கூறினர். இதையடுத்து அவர், சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி அறிந்ததும் நகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று, கணேசன் எம்.எல்.ஏ.வின் வீடு முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் கணேசன் எம்.எல்.ஏ.வின் மனைவி, மகன், மருமகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கணேசன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. கணேசனையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து இருக்கிறது. 

Next Story