காங்கேயம் அருகே விவசாயி தோட்டத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் செத்தன


காங்கேயம் அருகே விவசாயி தோட்டத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 20 July 2020 10:41 PM GMT (Updated: 20 July 2020 10:41 PM GMT)

காங்கேயத்தை அருகே விவசாயியின் தோட்டத்தில் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 13 செம்மறி ஆடுகள் பரிதாபமாக செத்தன. 3 ஆடுகள் காயமடைந்தன.

காங்கேயம்,

காங்கேயத்தை அடுத்த ஊதியூர் அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் சீனியப்பன் (வயது 60), விவசாயி. இவர் விவசாயத்துடன் 20 செம்மறி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அவற்றை இரவில் அடைத்து வைத்து விட்டு சீனிவாசன் வீட்டுக்குச் சென்றார்.

பின்னர் நேற்று காலையில் பட்டியைப்பார்க்க சென்ற சீனியப்பன், அங்கு சில ஆடுகள் செத்துக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

13 ஆடுகள் செத்தன

உடனே பட்டிக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 16 ஆடுகளை நள்ளிரவில் நாய்கள் சில கடித்து குதறியுள்ளது தெரியவந்தது. இதில் 13 ஆடுகள் அந்த இடத்திலேயே செத்தன. 3 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன.

செத்துப்போன ஆடுகளின் மொத்த மதிப்பு ரூ.1.25 லட்சம் ஆகும். இதுபற்றி உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தார்.

வெறிநாய்கள் தொல்லை

இந்த சம்பவம் பற்றி அப்பகுதியில் ஆடுகள் வளர்ப்போர் கூறியதாவது:-

இந்த பகுதியில் கோவில்பாளையம், நல்லிமடம், சிறுகிணறு, நொச்சிப்பாளையம், ஊதியூர், சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் தண்ணீர் வசதி இல்லாததால் வருமானத்திற்காக செம்மறியாடுகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறோம். பருவநிலை மாற்றங்களால் ஆடுகளைத்தாக்கும் நோய்களுடன் ஒருபுறம் போராடும் நாங்கள், இந்த வெறிநாய்களிடமிருந்து ஆடுகளை காக்க பெரும்பாடுபட வேண்டியதுள்ளது.

இந்தப் பகுதியில் தொடர்ந்து வெறிநாய்கள் இரவு நேரங்களில் பட்டியில் புகுந்தும், பகல் நேரங்களில் மேய்ச்சல் நிலங்களில் புகுந்தும் அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை கடித்து குதறி தின்று வருகின்றன. பெரும்பாலும் இந்த நாய்கள் தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் சுற்றித்திரியும் நாய்களே இந்த பகுதிக்கு வந்து ஆடுகளைக்கடித்து தின்று வருகிறது.

எனவே அதிகாரிகள் குப்பைக்கிடங்கில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story