ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அரசு பெண் ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அரசு பெண் ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 July 2020 3:35 AM GMT (Updated: 21 July 2020 3:35 AM GMT)

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அரசு பெண் ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு வெளியிடங்களில் இருந்து வந்த நபர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் நலமாக இருக்கிறார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஆண் சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் கிருமி நாசினி தெளித்து கூட்டரங்குக்கு கட்டுப்பாட்டு மையம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. கியூ பிரிவில் பணிபுரிந்து வரும் அரசு பெண் ஊழியர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் துறை ரீதியாக அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பெண் ஊழியர் தனக்கு சளி, காய்ச்சல் உள்ளதாக ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

கிருமிநாசினி தெளிப்பு

அதே பிரிவில் பணிபுரிந்த மற்றொரு பெண் ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து அரசு பெண் ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர். கட்டுப்பாட்டு மையத்தில் சுகாதார ஆய்வாளர் உடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதேபோல் 2 அரசு பெண் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசு டிரைவர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டு விட்டு உடனடியாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மனுக்கள் பெறும் இடத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது. ஊட்டி நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் கியூ பிரிவு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். வெளியாட்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லாமல் இருக்க அரசு ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 

Next Story