புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள், தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள், தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 July 2020 6:36 AM GMT (Updated: 21 July 2020 6:36 AM GMT)

புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமான ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி மற்றும் குமராட்சி ஆகிய 6 வட்டாரங்களில் 280 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடனாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த நிதியை பெற புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், பெண்கள் என்றால் 18 வயது முதல் 40 வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்நிதியை பெற பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி மற்றும் குமராட்சி வட்டாரங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் புதுப்பாளையம் இரட்டைபிள்ளையார்கோவில் தெருவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரிலும், 04142-210185 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story