நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது பெண்கள் உள்பட மேலும் 3 பேர் பலி


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது பெண்கள் உள்பட மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 21 July 2020 10:15 PM GMT (Updated: 21 July 2020 7:37 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பெண்கள் உள்பட மேலும் 3 பேர் பலியானார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் மாநகர பகுதியில் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,851-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 64 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள்.

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதேபோல் பாளையங்கோட்டையை சேர்ந்த 33 வயது பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆலங்குளத்தை சேர்ந்த 2 பேர், குருவிகுளத்தை சேர்ந்த 2 பேர், மேலநீலிதநல்லூரை சேர்ந்த 8 பேர், சங்கரன்கோவிலை சேர்ந்த 24 பேர், தென்காசியை சேர்ந்த ஒருவர், வாசுதேவநல்லூரை சேர்ந்த 17 பேர் உள்ளிட்டவர்கள் ஆவார்கள்.

அவர்களின் வீட்டை சுற்றி சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,259-ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் உள்ள சண்முகபுரம், தாமோதரநகர், வண்ணார்தெரு, தச்சர்தெரு, பிரையண்ட்நகர் 3, 7, 8, 9-வது தெரு, பூபாலராயர்புரம், சாரங்கபாணி தெரு உள்ளிட்ட இடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அங்கு உள்ள கடைகள் வழக்கம்போல் திறக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 60 வயது முதியவர் ஒருவர் இறந்து உள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,914-ஆக அதிகரித்து உள்ளது. இதில் 1,781 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 26 பேர் இறந்து உள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 24-ஆக அதிகரித்து உள்ளது.

Next Story