வரதட்சணை கொடுமையால் இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை - கணவர் கைது
மயிலம் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
மயிலம்,
மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 25). இவருக்கும் கொல்லியங்குணத்தை சேர்ந்த தேன்மொழி(22) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சரண்ராஜ், வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, தேன்மொழி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனே அவர் இதுபற்றி மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், விரைந்து வந்து தேன்மொழி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேன்மொழியின் தந்தை விநாயகம் மயிலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், தனது மருமகன் சரண்ராஜ், அவரது தாய் தவம்மாள் ஆகியோர் தேன்மொழியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். அதன் பேரில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி, சரண்ராஜை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மயிலம் போலீசார், சரண்ராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story