திருவள்ளூர் மாவட்டத்தில் அசுர வேகத்தில் பரவல்: ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா - பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது


திருவள்ளூர் மாவட்டத்தில் அசுர வேகத்தில் பரவல்: ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா - பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 24 July 2020 12:32 AM GMT (Updated: 24 July 2020 12:32 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் அசுர வேகத்தில் கொரோனா பரவி வருவதை தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான வி.எம்.நகர், நேதாஜி சாலை, லட்சுமிபுரம், ராஜாஜிபுரம், எம்.ஜி.ஆர்.நகர், கொண்டமாபுரம் போன்ற பகுதியில் நேற்று 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியத்தில் தொடுகாடு, செஞ்சி, மணவாளநகர் போன்ற பகுதியில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கடந்த 20-ந் தேதி தாசில்தார் கதிர்வேல் தலைமையில் கொரோனா பரிசோதனைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட மொத்தம் 78 பேருக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்படி முகாமில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் நேற்று மட்டும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வட்டார மருத்துவர் கோவிந்தராஜ் தெரிவித்து உள்ளார். இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 6,547 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள்.

3,892 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டம் முழுவதும் இதுவரையில் 188 பேர் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரப்பாக்கம் பாடசாலை தெரு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் 33 வயது வாலிபர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 44 வயது பெண், காயரம்பேடு கே.ஆர்.கார்டன் விஷ்ணுபிரியா நகரை சேர்ந்த 87 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

வண்டலூர் சிங்காரத்தோட்டம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி, காரணைப்புதுச்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் உள்ள எழில் டவர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், காந்தி நகரை சேர்ந்த 40 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 10 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 ஆயிரத்து 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,668 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் மற்றும் 27 வயது வாலிபர், படப்பை நரியம்பாக்கம் பகுதி 30 வயது பெண் மற்றும் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயது வாலிபர் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 330 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர்.

மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 6 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,282 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2,648 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

Next Story