கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சி ராணுவ நினைவு சின்னத்தில் எடியூரப்பா மரியாதை


கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சி ராணுவ நினைவு சின்னத்தில் எடியூரப்பா மரியாதை
x
தினத்தந்தி 26 July 2020 9:12 PM GMT (Updated: 26 July 2020 9:12 PM GMT)

கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சியையொட்டி ராணுவ நினைவு சின்னத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா மரியாதை செலுத்தினார்.

பெங்களூரு,

கார்கில் போரில் வெற்றி பெற்றதை கார்கில் விஜய் திவஸ் என்று ஆண்டுதோறும் மத்திய அரசு அனுசரித்து வருகிறது. இதையொட்டி கர்நாடக அரசின் ராணுவ வீரர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள ராணுவ நினைவு சின்னத்தில் கார்கில் விஜய் திவஸ் நிகழ்ச்சி நடந்தது. அந்த நினைவு சின்னம், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சியில் நான் பெருமையுடன் கலந்து கொண்டுள்ளேன். இந்திய தாய் நாட்டை காக்க ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்திற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது.

527 வீரர்கள் வீரமரணம்

இதை நமது ராணுவத்தில் போரிட்டு அந்த பகுதியை மீட்டனர். இதற்காக பாகிஸ்தானுடன் நடந்த போர் ஜூலை 26-ந் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போரில் கர்நாடகத்தை சேர்ந்த 16 வீரர்கள் தங்களின் உயிரை தியாகம் செய்தனர். மொத்தம் 527 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துடன் அரசு எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story