வரும் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு நாராயணசாமி எச்சரிக்கை


வரும் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 July 2020 9:59 PM GMT (Updated: 27 July 2020 9:59 PM GMT)

வரும் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் தொற்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைபடி 10 லட்சம் மக்கள்தொகை இருந்தால் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும். 14 லட்சம் மக்கள்தொகை இருக்கும் நிலையில் புதுவையில் ஏற்கனவே 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த வகையில் பிற மாநிலங்களைவிட புதுவையில் இரு மடங்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் இங்கு நோயாளிகளை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும்

மகாத்மா காந்தி, பிம்ஸ், வெங்கடேஸ்வரா, லட்சுமி நாராயணா, விநாயகா மிஷன் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் தலா 150 முதல் 300 பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவையிலும் வரும் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும். எனவே, சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் தேவைப்படுகிறது. அரசு சார்பில் ஜிப்மர், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. சில ஓட்டல்களில் கூட தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நடவடிக்கைக்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான உபகரணங்களை வாங்க நிதி வழங்கப்பட்டுள்ளது. மாகி, காரைக்காலில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன் எதிரொலியாக ஏனாம் பிராந்தியத்திலும் பாதிப்பு உயர்ந்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தல்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு கொரோனா வந்ததால் சட்டசபை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் திறந்த வெளியில் சட்டசபையை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முக கவசம் அணியாமல் வந்ததால் தான் சட்டசபையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் தான் சட்டசபைக்கு வந்தார். முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினேன். இப்போது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். நாங்களும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்.

வெளிமாநிலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக புதுவைக்கு வருவோரால் கொரோனா பரவுகிறது. கொரோனாவுக்கு மருந்து இல்லை. இப்போது தான் ஆராய்ந்து வருகிறார்கள். எனவே விதிமுறைகளை கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story