கடையம் அருகே 5-வது நாளாக போராட்டம்: விவசாயியின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு


கடையம் அருகே 5-வது நாளாக போராட்டம்: விவசாயியின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு
x
தினத்தந்தி 27 July 2020 11:35 PM GMT (Updated: 27 July 2020 11:35 PM GMT)

வனத்துறை விசாரணைக்கு சென்றபோது இறந்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் தங்களை மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரை கடையம் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது திடீரென்று அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.

அவரது உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் தாக்கியதில் தான் அணைக்கரை முத்து இறந்ததாக கூறியும், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

5-வது நாளாக போராட்டம்

நேற்று 5-வது நாளாக அணைக்கரை முத்துவின் வீட்டு முன்பு அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முன்னாள் சபாநாயகரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன், எம்.பி.க்கள் ஞானதிரவியம் (நெல்லை), தனுஷ்குமார் (தென்காசி), மாவட்ட மகளிர் அணி செல்வி சங்குகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் குமார், நகர செயலாளர் பொன்சுந்தரம் உள்ளிட்டோர் அணைக்கரை முத்துவின் வீட்டுக்கு வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது உறவினர்கள், “அணைக்கரை முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்“ என்றனர். மேலும், போலீசார் தங்களை மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேசி, உங்களுக்கு நீதி கிடைக்க பாடுபடுவோம்“ என்று உறுதி அளித்தார்கள்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

முன்னதாக, தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுடன் அவர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்சுந்தர் தயாளனை சந்தித்து பேசினர். அப்போது, அணைக்கரை முத்து இறந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது வீட்டில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதேபோல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

பூங்கோதை எம்.எல்.ஏ.வும் அணைக்கரை முத்துவின் வீட்டுக்கு வந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் கண்மணி மாவீரன், தென்காசி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகளும், அணைக் கரை முத்துவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தென்காசி தாசில்தார் சுப்பையன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், “வனத்துறையினரை கைது செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று தெரிவித்தனர்.

இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நீடித்த இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story