திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இணையதளம் வழியாக நவகிரக சாந்தி ஹோமம் வீட்டில் இருந்தபடியே பக்தர்கள் தரிசிக்கலாம்


திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இணையதளம் வழியாக நவகிரக சாந்தி ஹோமம் வீட்டில் இருந்தபடியே பக்தர்கள் தரிசிக்கலாம்
x
தினத்தந்தி 28 July 2020 9:17 PM GMT (Updated: 28 July 2020 9:17 PM GMT)

திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் இணையதளம் வழியாக நவகிரக சாந்தி ஹோமம் தொடங்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தரிசிக்கலாம்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனிபகவான் கோவில் உள்ளது. இங்கு வரும் டிசம்பர் 27-ந் தேதி, சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் விழா குறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை முழுமையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 மாதம் கோவில் மூடப்பட்டு அண்மையில்தான் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட் டது. வெளியூர், வெளிமாநில பக்தர்கள் கூட்டம் இன்றி, உள்ளூர் மக்கள் மட்டுமே தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது இணையதள வழி நவக்கிரக சாந்தி ஹோமம் தொடங்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே தரிசிக்கலாம்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நவக்கிரக சாந்தி ஹோமம் கொரோனா பேரிடர் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது. தற்போது அரசு வழிகாட்டுதலின்படி கோவில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தடியே நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கும் வகையில் இணையதளம் வழியாக நவக்கிரக சாந்தி ஹோமம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக http://www.thi-ru-n-a-l-l-a-rut-e-m-p-le.org என்ற தேவஸ்தான இணையதளம் பக்கத்தில் ஹோமம் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று பக்தர்கள் தாங்கள் விரும்பும் கால பூஜைகளை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்த ஹோம பூஜைக்கான இணையதள வழி இணைப்புத் தொடர் (யூ-டியூப் சேனல் இணைப்பு) அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் அவர்கள் நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு பயன்பெறலாம்.

கிரண்பெடி தரிசனம்

இந்த இணையவழி ஹோமத்தை இணையதளம் மூலம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் இருந்தே நவக்கிரக சாந்தி ஹோம பூஜையை தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.

இந்தநிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பெடி இணையவழியில் நவக்கிரக சாந்தி ஹோமத்திற்கு ஏற்பாடு செய்து தரிசனம் செய்தார்.

Next Story