வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொன்னமராவதி,
பொன்னமராவதியில் தாலுகா அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள், ஏழை, எளிய மக்கள் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ஏழைகளுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சாத்தையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.அதேகோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடியில் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செந்தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் வடிவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய விவசாய சங்க தலைவர் சக்தி வடிவேல், மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திருமயம் உள்பட மாவட்டத்தில் 7 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story