பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக விற்பனை ரூ.1¼ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் கேரள வாலிபர்கள் 4 பேர் கைது


பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக விற்பனை ரூ.1¼ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் கேரள வாலிபர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2020 10:10 PM GMT (Updated: 29 July 2020 10:10 PM GMT)

பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வந்த ரூ.1¼ கோடி போதைப்பொருடகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்கள் விற்பனை எந்த பிரச்சினையும் இன்றி நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக பெங்களூருவில் கஞ்சா விற்ற 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 வாலிபர்கள் கைது

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கபானவாராவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கேரள மாநிலத்தை சேர்ந்த சாகத் முகமது (வயது 24), அஸ்மல் (22), அஜின் வர்ஜிஸ் (21), நிதின் மோகன் (29) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தனர்.

கேரளாவை சேர்ந்த பிரபல போதைப்பொருள் விற்கும் நபருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தனர். அவர் மூலமாக டார்க் வெப்சைட் மூலமாக போதைப்பொருட்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் 4 பேரும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். அதாவது ஆன்லைன் மூலமாகவே போதைப்பொருட்களை விற்றுள்ளனா. குறிப்பாக தங்கும் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறி வைத்து போதைப்பொருட்களை 4 பேரும் விற்று வந்துள்ளனர்.

ரூ.1¼ கோடி மதிப்பு

இதுதவிர பெங்களூரு நகரில் பப் மற்றும் மதுபான விடுதிகளுக்கு போதைப்பொருட்களை வாடிக்கையாக விற்று பணம் சம்பாதித்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 2 ஆயிரம் எல்.எஸ்.டி, 110 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும்.

இவற்றில் எல்.எஸ்.டி. என்ற போதைப்பொருள் பேப்பர் போன்ற மாதிரியில் இருக்கும். இதனை அதிகஅளவில் வாங்கி 4 பேரும் விற்று வந்துள்ளனர். கைதான 4 பேர் மீதும் சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story