செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டது ஒரே நாளில் 540 பேர் கொரோனாவால் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டது ஒரே நாளில் 540 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 29 July 2020 11:18 PM GMT (Updated: 29 July 2020 11:18 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், குளக்கரை பகுதியில் வசிக்கும் 9 வயது, 11 வயது சிறுமிகள், 8 வயது சிறுவன், கோவிந்தராஜபுரம் 5-வது தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வண்டலூர் மூகாம்பிகை கோவில் தெருவை சேர்ந்த 30 வயது ஆண் உள்பட 36 பேரும், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ரெயில் நகர் பகுதியில் வசிக்கும் 3 வாலிபர்கள், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 30 வயது வாலிபர், 65 வயது மூதாட்டி, 62 வயது முதியவர் 29 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 5 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 841 ஆனது. இவர்களில் 9,900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 242 ஆக உயர்ந்தது. 3,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி மற்றும் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 8,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

3,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8,872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானதையடுத்து, இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 226 ஆனது.

Next Story