கொலைவழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்-மனைவி கைது


கொலைவழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 30 July 2020 12:19 AM GMT (Updated: 30 July 2020 12:19 AM GMT)

கொலைவழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தட்டார்மடம் அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவருடைய மகள் சகாய லூர்து (வயது 21). கடந்த 2010-ம் ஆண்டு சகாய லூர்துவை கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற வழக்கில், மணியாச்சி பாறைக்குட்டத்தை சேர்ந்த தங்கபாண்டி மகன் முருகன் என்ற இசக்கிமுத்து(45), அவரது மனைவி பேச்சித்தாய்(40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணவன்-மனைவி இருவரும், கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர்.

கணவன்-மனைவி கைது

தலைமறைவான இசக்கிமுத்து, பேச்சித்தாய் ஆகிய 2 பேரையும் கைது செய்வதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதையடுத்து விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் தங்கி இருந்த இசக்கிமுத்து, அவரது மனைவி பேச்சித்தாய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story