காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து ஜாக்டோ- ஜியோ அமைப்பு வலியுறுத்தல்


காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட   ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து   ஜாக்டோ- ஜியோ அமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 July 2020 5:37 AM GMT (Updated: 30 July 2020 5:37 AM GMT)

காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கிட்டு, ரெங்கசாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கண்ணையன், பெரியசாமி, சங்கர், சுந்தரவேலு, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் தஞ்சை கலெக்டர் மற்றும் முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுவை கலெக்டர் மற்றும் முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அனைத்து துறை ஊழியர்களையும், மக்களின் இன்னுயிரை காக்க முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்று பாராட்டுகிறோம். மாணவர்கள் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்ததற்கும் நன்றி தெரித்துக்கொள்கிறோம். மேலும் கொரோனாவை விரட்டி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஒரு நாள் ஊதியமான ரூ.150 கோடியை வழங்கி உள்ளனர்.

ரத்து செய்ய வேண்டும்

தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 5 ஆயிரத்து 68 பேர் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, பணி மாறுதல் உள்ளிட்டவை 1½ ஆண்டுகள் ஆகியும் நிலுவையில் உள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் இன்னும் ரத்து செய்யாமல் இருப்பது கடும் அதிருப்தி, வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஜாக்டோ, ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை முதல்-அமைச்சர் சந்திக்க உரிய நேரத்தை ஒதுக்குவதோடு, எங்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story