ஜோலார்பேட்டை அருகே, மூதாட்டியை கற்பழித்த காமக்கொடூரன் - ஜாமீனில் வந்த சிலநாட்களில் மீண்டும் கைதானார்


ஜோலார்பேட்டை அருகே, மூதாட்டியை கற்பழித்த காமக்கொடூரன் - ஜாமீனில் வந்த சிலநாட்களில் மீண்டும் கைதானார்
x
தினத்தந்தி 30 July 2020 7:58 AM GMT (Updated: 30 July 2020 7:58 AM GMT)

ஜோலார்பேட்டை அருகே கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த காமக்கொடூரன், 65 வயது மூதாட்டியை கற்பழித்ததாக மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. அவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் மனநலம் பாதிக்கப்பட்டு தாயுடன் வாழ்ந்து வருகிறார். மூதாட்டி தனது வீட்டையொட்டி பெட்டிக் கடை வைத்துள்ளார்.

சம்பவத்தன்று அன்னான்டப்பட்டி ஆரிப்கான் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராகுல் (30). மது போதையில் தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அவரை வீட்டில் தனி அறையில் தந்தை பூட்டி வைத்து உள்ளார். எனினும், ராகுல் நள்ளிரவு ஒரு மணியளவில் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து வெளியே வந்துள்ளார். பின்னர் 65 வயது மூதாட்டி வீட்டிற்குச் சென்று ஊறுகாய் வேண்டும் என கேட்டுள்ளார். உடனே மூதாட்டி கதவைத் திறந்துள்ளார். அப்போது ராகுல் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். அதன் பிறகு மூதாட்டியை கற்பழித்துள்ளார்.

வீட்டுக்குள்வைத்து பூட்டினார்

பின்னர் ராகுல் உடைகளை மாற்றிக்கொண்டிருந்த போது, மூதாட்டி வெளியே சென்று கதவை வெளிப்புறமாக பூட்டி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக பொதுமக்கள் இதுபற்றி ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து பூட்டிய வீட்டுக்குள் இருந்த ராகுலை மீட்டுச்சென்றனர்.

ராகுல் மீது ஏற்கனவே கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணை கற்பழித்ததாக போலீசார் வழக்கு பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார். இவர் முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட, உடல் ஊனமுற்றவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

கைது

இது சம்பந்தமாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வழக்குப் பதிவு செய்து ராகுலை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மூதாட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story