தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு கொரோனா பரவாது ஜிப்மர் டாக்டர் சொல்கிறார்


தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு கொரோனா பரவாது ஜிப்மர் டாக்டர் சொல்கிறார்
x
தினத்தந்தி 30 July 2020 10:58 PM GMT (Updated: 30 July 2020 10:58 PM GMT)

தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாது என்று ஜிப்மர் டாக்டர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் (1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை) தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தாய்ப்பால் விழிப்புணர்வு வார மையக் கருத்து ‘ஆரோக்கியமான உலகிற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்’ என்பதாகும்.

குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் சரியான அளவிலும் விகிதத்திலும் நிறைந்துள்ளது. குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி ஆகியவை நன்றாக இருக்கும். நோய் தொற்றுகள் ஏற்படாது. தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

கொரோனா பரவாது

கொரோனா காலத்திலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும். தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவுவது கிடையாது. கொரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும், சேயையும் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கொரோனா காலத்தில் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் தங்கள் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தாய்மார்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும்.

தாய்ப்பால் தானம்

பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் தானம் கொடுக்காலம். தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக எஞ்சிய தாய்ப்பால் வங்கிக்கு வழங்குவதால் தானம் செய்பவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அவர்களுக்கு பால் சுரப்பது அதிகரிக்கும். தானமாக பெறப்படும் பால் மூலம் குறைமாத குழந்தைகளும், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளும் பயனடைவார்கள்.

தாய்மார்கள் நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்படும். தாய்ப்பால் நன்கு கொதிக்க வைக்கப்பட்டு பதப்படுத்தப்படுவதால் அதில் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. சுத்திகரித்து பரிசோதிக்கப்பட்ட பின்னரே குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story