கோத்தகிரி நகர் பகுதியில் குட்டிகளுடன் உலா வந்த காட்டெருமைகள் பொதுமக்கள் பீதி


கோத்தகிரி நகர் பகுதியில்   குட்டிகளுடன் உலா வந்த காட்டெருமைகள்   பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 30 July 2020 11:15 PM GMT (Updated: 30 July 2020 11:15 PM GMT)

கோத்தகிரி நகர் பகுதியில் குட்டிகளுடன் காட்டெருமைகள் உலா வந்தன.

கோத்தகிரி, 

கோத்தகிரி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு வனப்பகுதியில் உணவுத்தேடி வரும் காட்டெருமைகள் சாலையில் குட்டிகளுடன் உலா வருகின்றன. கோத்தகிரி நகரில் ராம்சந்த் சதுக்கத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி அளவில் காட்டெருமைகள் குட்டிகளுடன் புகுந்தன. தொடர்ந்து இந்த காட்டெருமைகள் நீண்ட நேரமாக அங்கும், இங்குமாக உலா வந்தன. காட்டெருமைகளை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காட்டெருமைகள் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்று அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் புகுந்தன. கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருவதால் பொதுமக்கள் மத்தியில்பீதியடைந்துள்ளனர்.

Next Story