தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு கொரோனாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்பட 97 பேர் பலி


தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு கொரோனாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்பட 97 பேர் பலி
x
தினத்தந்தி 30 July 2020 11:25 PM GMT (Updated: 30 July 2020 11:25 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 97 பேர் பலியாகி உள்ளனர். இதுவரையில் 3,838 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் 59 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,560 ஆண்கள், 2,304 பெண்கள் என மொத்தம் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 51 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 276 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 802 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.

அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேரும், செங்கல்பட்டில் 354 பேரும், திருவள்ளூரில் 325 பேரும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 12 பேரும், திருவாரூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 25 லட்சத்து 1,919 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 615 ஆண்கள், 94 ஆயிரத்து 336 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 27 பேர் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

97 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 65 பேரும், தனியார் மருத்துவமனையில் 32 பேரும் என 97 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது பெண் குழந்தையும், நாகப்பட்டினத்தை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் 18 பேரும், நெல்லையில் 8 பேரும், தஞ்சாவூரில் 6 பேரும், விருதுநகர், தூத்துக்குடியில் தலா 5 பேரும், வேலூர், தேனி, கடலூர், கோவை, செங்கல்பட்டில் தலா 4 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், சேலம், புதுக்கோட்டை, தென்காசி, திருவாரூரில் தலா 3 பேரும், விழுப்புரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரையில் தலா இருவரும், அரியலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் என 26 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 3,838 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,295 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 295 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,126 பேரும், செங்கல்பட்டில் 580 பேரும், திருவள்ளூரில் 443 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 178 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 57 ஆயிரத்து 962 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 807 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 575 பேரும், ரெயில் மூலம் வந்த 425 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 583 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story