பக்ரீத் பண்டிகையையொட்டி, நாளை வீடுகளிலேயே முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


பக்ரீத் பண்டிகையையொட்டி, நாளை  வீடுகளிலேயே முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டும்  விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 July 2020 11:35 PM GMT (Updated: 30 July 2020 11:35 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை (சனிக்கிழமை) வீடுகளிலேயே முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும் என்று விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

விருத்தாசலம், 

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாடுவது குறித்து மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த அனைத்து ஊர் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் பேசியதாவது:-

சிறப்பு தொழுகை

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மங்கலம்பேட்டை கீழ வீதி, மேலவீதி, அலியார் நகர், மில்லத் நகர், மஸ்ஜிதே ரஹ்மத், உம்மா ஹபீபா ஆகிய பள்ளிவாசல்கள் மற்றும் மங்கலம்பேட்டையை சுற்றியுள்ள எம்.அகரம், எடைச்சித்தூர், டி.மாவிடந்தல், மாத்தூர், பழையப்பட்டினம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு குத்பா தொழுகையை நடத்தாமல், அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும். ஊர்வலமாக செல்வதற்கும் அனுமதி கிடையாது. அதேபோல் குர்பானி நிகழ்வையும் அவரவர் வீடுகளிலேயே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மங்கலம்பேட்டை கீழ வீதி பள்ளிவாசல் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், வக்கீல் பாரி இப்ராஹீம், மேலவீதி பள்ளிவாசல் காரியஸ்தர் சஹாப்தீன், எம்.அகரம் பள்ளிவாசல் முத்தவல்லி முகமது ஜாபர், காரியஸ்தர் ஹஜ்ஜி முகமது, டி.மாவிடந்தல் குடுஜான், பழையப்பட்டினம் அப்துல் ஹை, முகமது யாசீன், மாத்தூர் அப்துல் ஹமீது உள்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story