நெல்லையில் கொரோனா விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரம்


நெல்லையில் கொரோனா விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரம்
x
தினத்தந்தி 31 July 2020 12:11 AM GMT (Updated: 31 July 2020 12:11 AM GMT)

கொரோனா விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம் தொடங்கி வைத்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கலைக்குழு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவின் பேரில், கலைவாணர் கலைக்குழு, கோடாங்கி கலைக்குழு, பாவாணர் கலைக்குழு, மாரியம்மாள் கலைக்குழு, மக்கள் எழுச்சி கலைக்குழு, அசோக் கலைக்குழு உள்ளிட்ட 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த குழுக்கள் பிரசாரம் தொடங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் திட்ட இயக்குனர் மந்திராச்சலம் கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆடல், பாடல்

கலெக்டர் உத்தரவின்படி, கொரோனா விழிப்புணர்வு கலைக்குழுவினர் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ஆடல், பாடல் நிகழ்ச்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பலவகையான கிராமிய கலைநிகழ்ச்சியுடன் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், முககவசம், சமூக இடைவெளியின் அவசியம் பற்றி பிரசாரம் செய்வார்கள்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் 9 யூனியன்கள், 204 கிராம பஞ்சாயத்துகள், 1,337 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கலைக்குழுவினர் பிரசாரம் செய்வார்கள். தற்போது 10 குழுவினர் உள்ளனர். இவர்கள் தனித்தனியாக பிரிந்து சென்று பிரசாரம் செய்வார்கள். ஒரு மாதத்துக்குள் அனைத்து கிராமங்களிலும் பிரசாரத்தை முடித்து விடுவார்கள்.

தொற்று இல்லா மாவட்டம்

மேலும் கிராமப்பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படுகின்றன. வீடு, வீடாக சென்று துண்டுபிரசுரங்களும் வினியோகம் செய்யப்படுகின்றன. இதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக செயலாளர்கள் கண்காணிப்பார்கள். பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டை விட்டு வெளியே வரும்போது, முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story