நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியது


நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியது
x
தினத்தந்தி 31 July 2020 1:03 AM GMT (Updated: 31 July 2020 1:03 AM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது.

கூடலூர், 

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு மற்றும் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் ஏற்பட்டது.

நீர்மட்டம் உயர்வு

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று 114.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 513 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் மொத்த நீர் இருப்பு 1,710 மில்லியன் கன அடியாக இருந்தது.

அதேபோல் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் நேற்று (மொத்த உயரம் 71 அடி) 30.54 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையில் இருந்து வினாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 391 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- பெரியாறு-38.6, தேக்கடி-34.2, கூடலூர்-7.3, சண்முகாநதி அணை-5, உத்தமபாளையம்-6, வீரபாண்டி-2, வைகை அணை-7.4.

Next Story