“கொரோனா தொற்றில் மதுரை பாதுகாப்பான நிலையில் உள்ளது” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


“கொரோனா தொற்றில் மதுரை பாதுகாப்பான நிலையில் உள்ளது”   அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 31 July 2020 2:14 AM GMT (Updated: 31 July 2020 2:14 AM GMT)

கொரோனா தொற்றில் மதுரை மாவட்டம் பாதுகாப்பான நிலையில்தான் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

திருமங்கலம்,

திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கி பேசியதாவது:-

மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றில் மதுரை மாவட்டம் பாதுகாப்பான நிலையில்தான் உள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற தொகுப்புகள் வழங்கியது போல் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குவதும் முக்கியமானது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, இளம் பாசறை செயலாளர் ஆர்யா, கவுன்சிலர் ஆண்டிச்சாமி, இணைச்செயலாளர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story