பெரம்பலூர்-அரியலூரில் வரலட்சுமி விரதத்தையொட்டி பூஜை பொருட்கள் வாங்கிய பெண்கள்


பெரம்பலூர்-அரியலூரில் வரலட்சுமி விரதத்தையொட்டி பூஜை பொருட்கள் வாங்கிய பெண்கள்
x
தினத்தந்தி 31 July 2020 6:07 AM GMT (Updated: 31 July 2020 6:07 AM GMT)

பெரம்பலூர்- அரியலூரில் வரலட்சுமி விரதத்தையொட்டி பெண்கள் பூஜை பொருட்கள் வாங்கினர்.

பெரம்பலூர், 

ஆடி மாதத்தில் பவுர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் பெண் பக்தர்களால் வீட்டிலும், கோவில்களிலும் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வரலட்சுமி விரதம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்பட உள்ளது. காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அளித்தரக்கூடிய மகாலட்சுமி தேவியை போற்றி வணங்கி, அவரின் அருளாசி பெறுவதே வரலட்சுமி விரதத்தின் நோக்கம் என்கின்றனர் பக்தர்கள். சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்றும், கன்னி பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும் இந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.

பூஜை பொருட்கள்

வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பெண்கள் ஆன்மீக மற்றும் பொருள் செழிப்புக்காக அஷ்ட லட்சுமியின் ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும் என்பதே பக்தர்களின் ஐதீகம். இன்று கடைப்பிடிக்கப்பட உள்ள வரலட்சுமி விரதத்தையொட்டியும், ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையொட்டியும் பெரம்பலூரில் பெண் பக்தர்கள் விரதத்துக்கான பூஜை பொருட்களை நேற்று கடைகளில் வாங்கினர்.

பூஜை பொருட்களான வரலட்சுமி முகம், அலங்கார நகைகள், நோன்பு கயிறு, மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களும், தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களும் வாங்கி சென்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் வரலட்சுமி விரதத்தையொட்டி பெண்கள் பூஜை பொருட்கள் வாங்கினர்.

Next Story