இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம்: ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆனது


இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம்: ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆனது
x
தினத்தந்தி 31 July 2020 11:55 PM GMT (Updated: 31 July 2020 11:55 PM GMT)

புதுவையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் பலியானதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆனது.

புதுச்சேரி,

மாநிலம் முழுவதும் நேற்று 973 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 174 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 83 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 44 பேர் ஜிப்மரிலும், 8 பேர் கொரோனா கேர் சென்டரிலும், 13 பேர் காரைக்காலிலும், 26 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் 167 பேர், ஏனாமில் 11 பேர் என 178 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 67 பேர் கொரோனா கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது கதிர்காமம் மருத்துவமனையில் 380 பேர், ஜிப்மரில் 353 பேர், கொரோனா கேர் சென்டரில் 286 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 73 பேர், மாகியில் ஒருவர், பிற பகுதியில் ஒருவர் என 1,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,467 ஆக இருந்து வருகிறது.

142 பேர் வீடு திரும்பினர்

அதிகபட்சமாக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 86 பேர், ஜிப்மரில் 42 பேர், கோவிட் கேர் சென்டரில் 8 பேர், காரைக்காலில் 6 பேர் என மொத்தம் 142 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களை சேர்த்து இதுவரை 2,095 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் 38,734 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 34,606 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 441 பரிசோதனைகளின் முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 56 வயது பெண் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 23-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரை சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story