மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது


மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
x
தினத்தந்தி 1 Aug 2020 12:15 AM GMT (Updated: 1 Aug 2020 12:15 AM GMT)

மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 41), இவர், வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி 4-வது மெயின் ரோடு பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன், வினோத் குமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதுபற்றி மருந்து கடைக்காரர் வினோத்குமார் அளித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிலம்பரசனை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலம்பரசன், தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பைபாஸ் சாலையில் நின்று கொண்டு அங்கிருந்து ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று சிலம்பரசனை கைது செய்தனர்.

இதுபற்றி வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

9 வழக்குகள்

கைதான சிலம்பரசன் மீது 9 வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சிலம்பரசன், கடந்த 22-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மருந்து கடைக்காரரை செல்போனில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வழக்கில் தன்னை போலீசார் தேடி வருகின்றனர் என்பதை தெரிந்த ரவுடி சிலம்பரசன், ஆந்திராவுக்கு தப்பிச்செல்ல முயன்றார்.

அப்போது இரும்புலியூர் பைபாஸ் சாலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சிலம்பரசனை தனிப்படை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story