பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை


பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2020 12:51 AM GMT (Updated: 1 Aug 2020 12:51 AM GMT)

பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாக்கியலட்சுமி (வயது 35). இவர் கடந்த 28-ந் தேதி பாளையங்கோட்டை இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மக்கும் குப்பையை தனியாக பிரித்து எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டு இருந்தார்.

திடீரென்று அவரது வலது கை, எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில் அரசியல் கட்சியினர், நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இருந்தனர். தி.மு.க இளைஞர் அணியை சேர்ந்த சங்கர், நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த அலிப் பிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முத்துவளவன், மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதித்தமிழ் பேரவையை சேர்ந்த கலைக்கண்ணன், தமிழ் புலிகளை சேர்ந்த தமிழரசு, ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த அப்துல் ஜப்பார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வந்து இருந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

பின்னர் அவர்கள், கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “கை துண்டாகி பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

வழக்குப்பதிவு

ஊரடங்கு காலத்தில் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்தியதாக பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story