அம்பையில் பயங்கரம் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் கொலை மனைவி கைது


அம்பையில் பயங்கரம் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் கொலை மனைவி கைது
x
தினத்தந்தி 1 Aug 2020 12:55 AM GMT (Updated: 1 Aug 2020 12:55 AM GMT)

அம்பையில் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருடைய மனைவி இசக்கியம்மாள் (34). இவர்களுக்கு அபிநயா, அனிதா ஆகிய 2 மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் வாக்குவாதம் செய்வாராம். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் குமார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர் மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கிடையே கத்தியை காட்டி மகளை குத்தி விடுவேன் என குமார் மிரட்டியுள்ளார்.

அம்மிக்கல்லை போட்டு...

இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கியம்மாள், அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து குமார் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சோனியா, வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுதொடர்பாக போலீசார் இசக்கியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story