நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 506 பேருக்கு தொற்று: அரசு வக்கீல்-டாக்டர் கொரோனாவுக்கு பலி


நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 506 பேருக்கு தொற்று: அரசு வக்கீல்-டாக்டர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 1 Aug 2020 12:58 AM GMT (Updated: 1 Aug 2020 12:58 AM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அரசு வக்கீல், டாக்டர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 83 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் பாளையங்கோட்டை மண்டல பகுதியை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5,212 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 192 பேர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள்.

அரசு வக்கீல் பலி

சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன் கோட்டையை சேர்ந்த 55 வயதுடையவர் சங்கரன்கோவில் கோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆழ்வார்திருநகரியை சேர்ந்த 63 வயது சித்தா டாக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இதையடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 7 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 846 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 214 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளத்தை சேர்ந்த 13 பேர், கடையநல்லூரை சேர்ந்த 4 பேர், கீழப்பாவூரை சேர்ந்த 9 பேர், குருவிகுளத்தை சேர்ந்த 12 பேர், மேலநீலிதநல்லூரை சேர்ந்த 7 பேர், தென்காசியை சேர்ந்த 8 பேர், வாசுதேவநல்லூரை சேர்ந்த 6 பேர் ஆவார்கள். மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

Next Story