சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 31 July 2020 10:00 PM GMT (Updated: 1 Aug 2020 3:25 AM GMT)

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு 3,500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் பட்டை கோவில் பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 64 வயதுடைய முதியவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் கடந்த 25-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 32 பேரும், பிற மாவட்டத்தை சேர்ந்த 11 பேரும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story