ஆடு-மாடு வெட்டக்கூடாது என்று அறிவிப்பு: திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 இடங்களில் சாலை மறியல்


ஆடு-மாடு வெட்டக்கூடாது என்று அறிவிப்பு: திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Aug 2020 6:00 AM GMT (Updated: 1 Aug 2020 5:50 AM GMT)

திண்டுக்கல்லில் பொதுஇடங்களில் ஆடு, மாடுகளை வெட்டக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவித்தை தொடர்ந்து அடுத்தடுத்து 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில், பொதுஇடங்களில் ஆடு, மாடுகளை வெட்டக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து ஊழியர்கள் அறிவிப்பு செய்தபடி இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் பேகம்பூர், யானைதெப்பம், வத்தலக்குண்டு சாலை உள்பட 3 இடங்களில் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி அறிவிப்பு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே ஒலிபெருக்கி அறிவிப்புக்கு சென்ற மாநகராட்சி அதிகாரி, ஊழியர் என 2 பேர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story