நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: மும்பை போலீசாரின் செயல்திறன் மீது கேள்வி எழுப்புவதை கண்டிக்கிறேன் பட்னாவிசுக்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலடி


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: மும்பை போலீசாரின் செயல்திறன் மீது கேள்வி எழுப்புவதை கண்டிக்கிறேன் பட்னாவிசுக்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலடி
x
தினத்தந்தி 2 Aug 2020 12:44 AM GMT (Updated: 2 Aug 2020 12:44 AM GMT)

மும்பை போலீசாரின் செயல்திறன் மீது கேள்வி எழுப்புவதை தான் வன்மையாக கண்டிப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்று சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இதையடுத்து பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மராட்டிய முக்கிய தலைவர்கள் பலரும் இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், இந்த வழக்கில் பணமோசடி நடந்திருப்பதாக புகார் எழுவதால் வழக்கை அமலாக்கத்துறையும் விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் “இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க மக்கள் விரும்புகின்றனர். ஆனால் மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு அவ்வாறு செய்ய தயங்குகிறது” என்று கூறினார்.

இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்து கூறியதாவது:
மராட்டியத்தில் பட்னாவிஸ் தலைமையிலான அரசில் 5 ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் தான் தற்போது எங்களின் தலைமையிலான அரசிலும் பணியாற்றுகிறார்கள் என்பதை அவர் மறந்துவிட கூடாது.

மும்பை போலீசார் கொரோனாவுக்கு எதிரான போராளிகளாக செயல்பட்டனர். இந்த போராட்டத்தில் பல போலீசாரும் நோய்வாய்ப்பட்டு உயிரை பறிகொடுத்தனர். அவர்களின் செயல்திறனை கேள்விக்கு உட்படுத்துவது அவர்களை அவமானப்படுத்துவது ஆகும். நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் யாரிடமாவது இருந்தால் அதை நீங்கள் போலீசில் கொடுக்கலாம். நாங்கள் குற்றவாளிகளை கண்டறிந்து நிச்சயம் தண்டனை பெற்று தருவோம். தயவுசெய்து இந்த வழக்கை மராட்டியம் மற்றும் பீகார் இடையேயான பிச்சினையாக மாற்றவேண்டாம். இவ்வாறு முதல்-மந்திரி உத்தரவு தாக்கரே கூறினார்.

Next Story