படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது


படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2020 1:38 AM GMT (Updated: 2 Aug 2020 1:38 AM GMT)

படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் அஜய் பிரசாத் (வயது 22). சாலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 29-ந்தேதி வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

படப்பையை அடுத்த சாலமங்கலம் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அஜய் பிரசாத் கொலை வழக்கு தொடர்பாக செய்யார் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற அப்பத்தா (23), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20), அதே பகுதியை சேர்ந்த சந்த்ரு என்ற பல்லு சந்த்ரு(20), படப்பை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில் விக்னேஷ் படப்பை பகுதியில் தங்கியிருந்து கியாஸ் கம்பெனியில் வேலை செய்து வந்ததும், இவருக்கும் அஜய் பிரசாத்தாக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந்த முன்விரோதம் காரணமாக அஜய் பிரசாத்தை வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story