சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது, மினி லாரி மோதல்; 2 தொழிலாளர்கள் பலி - ஓசூர் அருகே விபத்து


சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது, மினி லாரி மோதல்; 2 தொழிலாளர்கள் பலி - ஓசூர் அருகே விபத்து
x
தினத்தந்தி 1 Aug 2020 9:45 PM GMT (Updated: 2 Aug 2020 4:17 AM GMT)

ஓசூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது, மினி லாரி மோதி 2 கூலித்தொழிலாளர்கள் பலியானார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி பகுதியில் கோழிகளை வாங்கிச் செல்வதற்காக மினி லாரி ஒன்று நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து புறப்பட்டது. இந்த லாரியை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சையத் பாஷா (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றார். மேலும் இந்த மினி லாரியில், 3 கூலித்தொழிலாளர்கள் வந்தனர்.

இந்த நிலையில், நள்ளிரவில் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதியில் சென்ற போது, அங்கு சாலையோரம் கிரானைட் பாரத்துடன் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்புறம் மினி லாரி மோதியது. இந்த விபத்தில், மினி லாரியில் சென்ற தொழிலாளி அல்லா பகஷ்(30) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் சையத் பாஷா உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அல்லா பகஷின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு தொழிலாளியான ஜூனைத்(20) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மினி லாரி டிரைவருக்கும், இன்னொரு கூலி தொழிலாளிக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

Next Story