தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரே நாளில் 6,501 பேர் ‘டிஸ்சார்ஜ்’


தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரே நாளில் 6,501 பேர் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 5 Aug 2020 1:10 AM GMT (Updated: 5 Aug 2020 1:10 AM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 52 ஆயிரத்து 955 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,041 ஆண்கள், 2,022 பெண்கள் என மொத்தம் 5,063 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 232 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 655 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,023 பேரும், விருதுநகரில் 424 பேரும், திருவள்ளூரில் 358 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 4 பேரும், தர்மபுரியில் 2 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 27 லட்சத்து 86 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த பட்டியலில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 476 ஆண்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 782 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 27 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 276 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 33 ஆயிரத்து 626 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

108 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 83 பேரும், தனியார் மருத்துவமனையில் 25 பேரும் என 108 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 23 பேரும், கன்னியாகுமரியில் 9 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவையில் 7 பேரும், காஞ்சீபுரம், நெல்லை, திருவள்ளூரில் தலா 6 பேரும், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, மதுரையில் தலா 4 பேரும், கடலூர், சேலம், விருதுநகரில் தலா 3 பேரும், ராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சி, திருப்பூர், வேலூரில் தலா இருவரும், விழுப்புரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், தர்மபுரியில் தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 4,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

6,501 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனாவால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களை விட பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்று 6 ஆயிரத்து 501 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,143 பேரும், காஞ்சீபுரத்தில் 559 பேரும், விருதுநகரில் 424 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 784 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 55 ஆயிரத்து 152 பேர் உள்ளனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. நேற்றைய நிலவரப்படி 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 844 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 633 பேரும், ரெயில் மூலம் வந்த 426 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 699 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 5,636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story