மீண்டும் பணி வழங்ககோரி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் போராட்டம்


மீண்டும் பணி வழங்ககோரி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2020 1:32 AM GMT (Updated: 5 Aug 2020 1:32 AM GMT)

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையிலிருந்து நீக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்ககோரி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. புதிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியதாக தெரிகிறது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி அந்த தனியார் தொழிற்சாலை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

மீண்டும் போராட்டம்

வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நேற்று தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு தங்களது குடும்பத்துடன் அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. யின் மாவட்ட பொதுச்செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி அவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

200 பேர் கைது

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை கைது செய்து அப்புறப்படுத்த முயன்றனர். அதில், தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் 30 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Next Story