திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா


திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Aug 2020 1:34 AM GMT (Updated: 5 Aug 2020 1:34 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. திருவள்ளூர் நகராட்சிக்குஉட்பட்ட பகுதிகளில் நேற்று 13 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 15 ஆயிரத்து 96 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 11 ஆயிரத்து 402 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்தது.

வண்டலூர்

செங்கல்பட்டு மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் சண்முகா நகர் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், காயரம்பேடு ஜெயாநகர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயது ஆண், 30 வயது இளம்பெண், வண்டலூர் கணபதி நகர் பகுதியை சேர்ந்த 58 வயது பெண் உள்பட 13 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 917 ஆனது. இவர்களில் 13 ஆயிரத்து 62 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று ஒரே நாளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்தது. 2,583 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காரணித்தாங்கல் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை மற்றும் மணிமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 27 வயது, 45 வயதுடைய ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் சேர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 303 ஆக உயர்ந்தது. இவர்களில் 7 ஆயிரத்து 316 பேர் ஆஸ்பத்திரியில் குணமடைந்து வீடு திரும்பினர். 2,859 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதையொட்டி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது.

Next Story