ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூர் வாலிபர் கைது


ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூர் வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2020 2:26 AM GMT (Updated: 5 Aug 2020 2:26 AM GMT)

ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட வடிவேல் என்பவரை பிடிக்க தனிப்படையினர் திருப்பூர் விரைந்துள்ளனர்.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரெயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச்சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு காரில் செல்ல இ-பாஸ் கட்டாயமாகும். மருத்துவச் சிகிச்சை, இறப்பு உள்பட தவிர்க்க முடியாத பயணங்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எந்த மாவட்டத்துக்குச் செல்ல விண்ணப்பம் செய்கிறார்களோ அந்த மாவட்ட கலெக்டர் அல்லது அவரின் நேர்முக உதவியாளர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இ-பாஸ் கிடைக்கும் என்ற நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது. அவசர பயணமாகப் பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கு விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ரூ.1,500 கொடுத்தால் இ-பாஸ்

இந்த நிலையில் வேலூர் மாவட்ட வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் கடந்தசில நாட்களுக்கு முன்பு ரூ.1,500 கொடுத்தால் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். நேற்று அந்தச் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ஒருவர் பேசும் ஆடியோ பல்வேறு வாட்ஸ்-அப் குரூப்புகளில் வைரலாகப் பரவியது.

அந்த ஆடியோவில், வேலூரில் இருந்து சென்னைக்குச் செல்ல வாடகை காருக்கு ரூ.1,500-ம், சொந்த காருக்கு ரூ.1,650-ம் தர வேண்டும் என்றும், செல்லும் வழியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பார்த்துக் கொள்கிறேன். இந்தச் செல்போன் எண்ணுக்கு காரில் செல்லும் நபரின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களையும், ‘கூகுள் பே’ செயலியில் பணத்தையும் அனுப்பி வைக்கும்படி ஒருவர் தெரிவிக்கிறார்.

வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார்

இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் இதுதொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல்துறைக்கு தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அந்தச் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அந்த நபர் வேலூர் பெரிய அல்லாபுரத்தைச் சேர்ந்த அசோக்குமாரின் மகன் ஜெகதீஸ்குமார் (வயது 18) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வீட்டில் இருந்த ஜெகதீஸ்குமாரை பிடித்து விசாரித்தனர்.

அவர், கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தார். சமூக வலைத்தளத்தில் இ-பாஸ் பெற்றுத் தருவதாக வந்த பதிவின் அடிப்படையில் உறவினர் ஒருவருக்கு இ-பாஸ் பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் இ-பாஸ் பெற்றுக் கொடுப்பதற்காக தனியாக ஒரு வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி அதில் நண்பர்கள், உறவினர்களை இணைத்துள்ளார். பல்வேறு வாட்ஸ்-அப் குரூப்பில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தருவதாகப் பதிவிட்டுள்ளதும் தெரிய வந்தது.

வேலூர் வாலிபர் கைது

இவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை திருப்பூரில் உள்ள வடிவேல் என்பவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைப்பதாகவும், அவர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் பெற்று இ-பாஸ் பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் ஜெகதீஸ்குமாரை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதில் சம்பந்தப்பட்ட திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை பிடிக்க தனிப்படையினர் திருப்பூருக்கு விரைந்துள்ளனர். வடிவேல் பிடிபட்டால் தான் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. எத்தனை பேருக்கு இ-பாஸ் வாங்கி கொடுத்தார்கள் என்பது குறித்துத் தகவல் தெரிய வரும் எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடியோ வெளியீடு

இதேபோல கடலூரில் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்று தரப்படும். அதற்காக சேவை கட்டணமாக ரூ.500 வசூலித்து வருவதாக டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப், முக நூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் டிராவல்ஸ் உரிமையாளர் பேசியதாவது:-

கடலூரை சேர்ந்த எங்கள் டிராவல்ஸ் மூலம் பயணிகளுக்கும், டாக்சி சேவையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும், இ-பாஸ் தேவைப்பட்டால் என்னுடைய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரை மணி நேரத்தில் இ-பாஸ் போட்டு தருகிறேன். அசல் இ-பாஸ் தான். போலி கிடையாது. ஆகவே யாரும் பயப்பட தேவையில்லை. யார் பயணம் செய்கிறார்களோ அவர்களுடைய அசல் ஆதார் கார்டை புகைப்படம் எடுத்து எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்புங்கள். அதிகபட்சம் அரை மணி நேரத்தில் பாஸ் எடுத்து கொடுத்து விடுவேன்.

இதற்கான சேவை கட்டணமாக ரூ.500 வாங்கி வருகிறேன். இது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாஸ் எடுத்து கொடுத்து இருக்கிறோம். இந்த மாதத்திற்கு தேவைப்படும் டிரைவர்கள் எண்ணுடைய செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி, தன்னுடைய செல்போன் எண்ணையும் குறிப்பிடுகிறார்.

விசாரணை

இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இது பற்றி விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிராவல்ஸ் உரிமையாளர் கடலூர் சாவடியை சேர்ந்த 24 வயது வாலிபர் என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்டபோது, அந்த ஆடியோவில் பேசிய நபர் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் உண்மையில் இ-பாஸ் பெற்று உள்ளாரா? அல்லது போலி இ-பாஸ் வழங்கினாரா? அப்படியானால் அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இது வரை எவ்வளவு பணம் பெற்று உள்ளார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் அதன் உண்மை தன்மை தெரிய வரும் என்றார்.

Next Story