வேலூர், திருவண்ணாமலையில் த.மா.கா. பிரமுகர் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி


வேலூர், திருவண்ணாமலையில் த.மா.கா. பிரமுகர் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 5 Aug 2020 5:38 PM GMT (Updated: 5 Aug 2020 5:38 PM GMT)

வேலூர், திருவண்ணாமலையில் த.மா.கா. பிரமுகர் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அதேபோன்று தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 6 பேர் உயிர் இழந்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

வேலூர்

வேலூர் சார்பனாமேட்டை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 66) கடந்த மாதம் 5-ந் தேதி கொரோனா தொற்று சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை கவனித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சுமார் ஒருமாதமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மஞ்சு (60). இவர் கடந்த மாதம் 13-ந்தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (58). இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் ஆம்பூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கொரோனா தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அப்துல் ரகுமான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஆம்பூர் கே.எம்.நகர் பகுதியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கொரோனா தொற்றுக்கு பலியானார். இதனால் அப்பகுதியில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தெருக்களில் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை காந்திசவுக் பகுதியை சேர்ந்தவர் எம்.வி.பழனி (72), தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேலூர் மத்திய மாவட்ட துணைத்தலைவர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செஞ்சியை சேர்ந்தவர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சர்தார் பாஷா (53) என்பவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 25-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து வேலூர், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 பேரின் உடல்களும் முழு பாதுகாப்புடன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தனூரை சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

சாத்தனூர்

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த வயது 37 வயது வாலிபர் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 29-ந்தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சோமவாரக்குளத் தெருவை சேர்ந்த 90 வயது முதியவர் கடந்த 1-ந்தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்த 61 வயது முதியவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் கடந்த 2-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story