‘கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன்’ சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த சரண்யா பேட்டி


‘கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன்’ சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த சரண்யா பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2020 8:03 PM GMT (Updated: 5 Aug 2020 8:03 PM GMT)

கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன் என சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சரண்யா தெரிவித்தார்.

காரைக்கால்,

சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 36-வது இடத்தையும் புதுச்சேரி யூனியன் பிரதேச அளவில் முதல் இடத்தையும் பிடித்து காரைக்கால் மாணவி சரண்யா சாதனை படைத்துள்ளார். இதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் அர்ஜூன்சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

இந்த சாதனை குறித்து நிருபர்களிடம் சரண்யா கூறியதாவது:-

காரைக்கால் பாரதிதாசன் நகரில் வசித்து வருகிறேன். அப்பா கத்தார் தனியார் கப்பலில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அம்மா எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி காலமாகிவிட்டார். மூத்த சகோதரி எம்.பி.ஏ. முடித்துள்ளார். தம்பி எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 10-ம்வகுப்பு வரை காரைக்கால் ஓ.என்.ஜி.சி பொதுப்பள்ளியில் பயின்றேன். காரைக்கால் அன்னை தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 பயின்றேன். அப்போது பல அனுபவங்களை கற்றுக்கொண்டேன்.

விடா முயற்சி

பள்ளிப் பருவமும் சரி, கல்லூரி பருவமும் சரி புதுச்சேரி அரசு பலவகையில் எனக்கு உதவி செய்தது. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. பட்டப்படிப்பு முடித்தேன். அதன்பிறகு இரு முறை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினேன். அதில் தேர்வாகவில்லை. விடா முயற்சியாக 3-ம் முறை அதாவது, 2019-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சியானேன்.

அகில இந்திய அளவில் 36-வது இடத்தையும், புதுச்சேரி யூனியன் பிரதேச அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளேன். இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. சிறு வயது முதல் பொதுமக்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதன்படி சின்ன சின்ன சேவைகளை அவ்வப்போது செய்து வந்துள்ளேன்.

கல்லூரி பயிலும் போதுதான், அப்பா சிவில் சர்வீசஸ் எழுதினால், ஏராளமான பொதுமக்களுக்கு சேவை செய்யலாம் என விதையிட்டார். நானும் ஆர்வமுடன் படித்தேன். பலர் கூறுவது போல், பிளஸ்-2 முதல் இதற் காக கடினமாக உழைக்கவேண்டும் என்பதில்லை. அந்த நினைவுகளோடு, கல்லூரிக்குப் பிறகு 2 வருடம் கடினமாக உழைத்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிபெறலாம்.

கிராமப்புற மேம்பாடு

கலெக்டராக வேண்டும் என லட்சியமாக இருந்தேன். எனது பணியும் அந்தவகையில் தான் இருக்கும். குறிப்பாக, கிராமப்புற மேம்பாட்டுக்காக நான் தனி கவனம் செலுத்துவேன். எனது முதல் பணி தமிழகத்தில் இருக்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளேன். தற்போது கொரோனா அச்சம் மக்களிடையே உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் வகையில், சமூக இடைவெளி, முகக் கவசத்தை கட்டாயமாக கடைபிடித்து, தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தாலே கொரோனாவை நிச்சயம் விரட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story