வருகிற 10-ந் தேதி முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு


வருகிற 10-ந் தேதி முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2020 9:25 PM GMT (Updated: 5 Aug 2020 9:25 PM GMT)

தமிழகம் முழுவதும் 10-ந் தேதியில் இருந்து தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அனைத்து பகுதிகளிலும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, உடற்பயிற்சி கூடங்கள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்கள், கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, முதல்-அமைச்சர் பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-

10-ந் தேதி முதல்...

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சி கூடங்களை திறக்க ஆகஸ்டு 5-ந் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்கள் (ஸ்டாண்ட் அலோன்), 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயது உடைய வாடிக்கையாளர்களுடன் 10-ந் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story