தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெல்லை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெல்லை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:42 AM GMT (Updated: 6 Aug 2020 1:42 AM GMT)

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெல்லை வருகிறார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நெல்லை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். அவர், மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லைக்கு வருகை தருகிறார். அவர் மதுரையில் இருந்து கார் மூலம் காலை 10 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருகிறார்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

இதற்காக கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் சிறிய மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மேடையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிறைவு பெற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர், கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டு உள்ளது. அதை தடுக்க நடவடிக்கையை எப்படி தீவிரப்படுத்த வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்துகிறார். மேலும் மாவட்டத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கிறார்.

விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

இந்த கூட்டத்தை முடித்த பின்னர் முதல் தளத்துக்கு வருகிறார். அங்கு தொழில்முனைவோர், விவசாய சங்க நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் கலந்து கொள்கிறார். கூட்டத்தை முடித்த பின்னர் மதியம் 2 மணி அளவில் நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை செல்கிறார். அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். 2.30 மணி அளவில் நெல்லையில் இருந்து கார் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், முதல்-அமைச்சர் வருகையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. அலுவலகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்திற்கும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

முதல்-அமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் இருந்து நெல்லை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கங்கைகொண்டான் சோதனை சாவடியில் நேற்று ஆய்வு செய்தார்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டார். தேவையில்லாமல் மாவட்டத்துக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். அவர் முதல்-அமைச்சர் செல்லும் சாலையும் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் வருகையொட்டி நெல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story