கோவில்பட்டியில் பயங்கரம்: பெயிண்டர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கோவில்பட்டியில் பயங்கரம்: பெயிண்டர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Aug 2020 2:15 AM GMT (Updated: 6 Aug 2020 2:15 AM GMT)

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டரை வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் கோடீசுவரன் (வயது 30). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று மாலையில் இவர் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு பதுங்கி இருந்த மர்மநபர்கள் திடீரென்று கோடீசுவரனை வழிமறித்தனர்.

ஓட. ஓட விரட்டி வெட்டிக்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த கோடீசுவரன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட கோடீசுவரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோடீசுவரனுக்கும், கடலையூரைச் சேர்ந்த ராக்கம்மாள் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராக்கம்மாள் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, கடலையூரில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில்தான் கோடீசுவரன் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே. குடும்ப பிரச்சினை காரணமாக கோடீசுவரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டரை மர்மநபர்கள் வழிமறித்து ஓட. ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story