மாவட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டது: ஒரேநாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டது: ஒரேநாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 Aug 2020 10:00 PM GMT (Updated: 6 Aug 2020 4:01 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. அந்தவகையில், ஒரேநாளில் 150 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று நேற்று புதிய உச்சத்தை தொட்டது. ஒரேநாளில் 150 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 129 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 666 ஆக உள்ளது. இதுவரை 1,822 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 812 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று வெளியான பட்டியலில் 2 ஆண்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கொரோனா இறப்பு எண்ணிக்கை 32 ஆக உள்ளது.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காய்ச்சல் பரிசோதனை முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனைக்காக மேலும் புதிய கருவிகள் வர உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தார்.

ஆலங்குடியை அடுத்த கல்லாலங்குடி பெரியார் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகரில் 40 வயது பெண் ஒருவருக்கும், ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் 4 பேருக்கும், ஆலங்குடி மின்வாரிய உதவிப் பொறியாளர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து நகர அலுவலகம், கிராமியம் மேற்கு மற்றும் வடக்கு மின்வாரிய அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், திருவரங்குளம் வட்டார சுகாதார மருத்துவமனை சார்பில் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story